சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் நாளை 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: செப்.9ம் தேதி, செப்.10ம் தேதி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு செப்.8ம் தேதி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 10,545 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் மற்றும் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு செப்.8ம் தேதி தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை திருநெல்வேலி திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 9,299 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் www.tnstc.in இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், நாளை செப்.8ம் தேதி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழா முடிவடைவதை முன்னிட்டு வேளாங்கண்ணியிலிருந்து பல்வேறு இடங்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பாக அதாவது பெங்களூரு, சென்னை, தூத்துக்குடி கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி தஞ்சாவூர், சிதம்பரம் பாண்டிச்சேரி திண்டுக்கல், மணப்பாறை ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
The post வார இறுதி, சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை 600 சிறப்பு பஸ் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.
