புழல்: செங்குன்றம் அருகே நிலத்தடி நீரை மாசுபடுத்தி வந்த ஒரு தனியார் பிரபல இனிப்பு நிறுவனத்தின் முன்பு இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை பெரம்பூரை தலைமையிடமாக கொண்ட ஒரு பிரபல தனியார் இனிப்பு நிறுவனம், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 26க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களை நடத்தி வருகிறது. இந்த இனிப்பு நிறுவனத்துக்கு சொந்தமாக, செங்குன்றம் அருகே பூதூர்-கும்மனூர் சாலையில் இனிப்புகள் மற்றும் உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு சுழற்சி முறையில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இந்த இனிப்பு தொழிற்சாலையில் பல்வகை இனிப்பு பொருட்களின் தயாரிப்புக்காக, இங்குள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகள் மூலம் தினமும் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் இந்நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும், இனிப்பு நிறுவனத்தில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், இதன் அருகிலுள்ள கோபாலபுரம் நகர் மற்றும் விவசாய நிலங்களில் வெளியேற்றப்படுவதால், இப்பகுதி நிலத்தடி நீரும் மாசு படிந்து காணப்படுகிறது.
இதுதவிர, இந்நிறுவனத்தை ஒட்டிய கிராம சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி வருவதால், அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வாகனங்களில் சென்றுவர முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை அந்நிறுவனத்தை பூதூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோழவரம் போலீசார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிப்பு நிறுவனத்தின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.
The post நிலத்தடி நீரை மாசுபடுத்திய இனிப்பு நிறுவனம் முற்றுகை: செங்குன்றம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.
