×

இன்று 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30கி.மீ முதல் 40கி.மீ வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் மே 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் இன்று, நாளை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று லட்சத்தீவு பகுதியில் சூறாவளி மணிக்கு 40 முதல் 45கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55கி.மீ. வேகத்திலும், மே 25, 26-ல் மன்னார் வளைகுடா, தமிழ்நாடு கடலோர பகுதிகளில் மணிக்கு 40 – 55கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். சூறைக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post இன்று 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,Chennai ,Tamilnadu ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...