×

செங்கல்பட்டில் புதிதாக கட்டிய தொழில்நுட்ப பயிற்சி மைய செயல்பாடுகள்: தலைமை செயலாளர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே புதிதாக கட்டப்பட்ட அரசு தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் கட்டிட மற்றும் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து இன்று காலை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதில் கலெக்டர் ராகுல்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் 112 அரசு தொழிற்பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், ரூ.2,877 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் உருவாக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, முதல்கட்டமாக 71 அரசு தொழிற்பயிற்சி மையங்களில், ரூ.34.73 கோடி மதிப்பில் புதிய தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே வெண்பாக்கத்தில் இயங்கி வரும் கிண்டி, காஞ்சிபுரம், ஒரகடம் உள்ளிட்ட 3 அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை அடுத்த மாதம் 24ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அருகே வெண்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை இன்று காலை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, அங்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்களின் செயல்பாடுகள் பற்றி அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டறிந்தார்.

மேலும், அப்பயிற்சி மைய வளாகத்தில் முதல்வரின் திறப்பு விழாவுக்கு பந்தல் அமைக்கவும், அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், ஐடிஐ முதல்வர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் புதிதாக கட்டிய தொழில்நுட்ப பயிற்சி மைய செயல்பாடுகள்: தலைமை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chengalpat ,Chief Secretary ,Chengalpadu ,Government Technical Training Centre ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...