×

தொழிலாளர்கள் போராட்டம் எதிரொலி; தாவரவியல் பூங்காவில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூக்கவில்லை

ஊட்டி: பூங்கா ஊழியர்களின் ஒரு மாத கால வேலை நிறுத்த போராட்டத்தால் ஊட்டி தாவரவியல் பூங்காவிலும் மலர்கள் குறைந்தே காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனினும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல லட்சம் பேர் வந்து செல்லும் நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஆண்டுதோறும் மே மாதம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சியின் போது பூங்கா பராமரிக்கப்பட்டு, அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இதற்காக, டிசம்பர் மாதம் முதல் பூங்காவை ஊழியர்கள் தயார் செய்வார்கள். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மலர்செடிகளுக்கு உரமிடும் பணிகள், தண்ணீர் தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இதனால், ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்துக் குலுங்கும். ஆனால், இம்முறை கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி முதல் சுமார் ஒரு மாத காலம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மாவட்டம் முழுவதிலும் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் பராமரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால், ரோஜா பூங்காவில் இம்முறை வழக்கத்தை காட்டிலும் மலர்கள் குறைந்தே காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேபோல், வரும 19ம் தேதி மலர் கண்காட்சி நடக்கும் நிலையில், தாவரவியல் பூங்காவிலும் பெரும்பாலான செடிகளில் மலர்கள் காணப்படுவதில்லை. பொதுவாக ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் தாவரவியல் பூங்காவில் அதிகளவு மலர்கள் காணப்படும். ஆனால், தற்போது வரை பெரும்பாலான செடிகளில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

அனுபவம் இல்லாத அதிகாரிகளும் காரணம்
தாவரவியல் பூங்காவில் டிசம்பர் மாதம் முதல் நாற்று நடவு பணிகள் துவங்கி நடக்கும்.செடிகளின் வளர்ச்சிக்கேற்ப இந்த மலர் நாற்றுக்களை நடவு செய்வார்கள். ஆனால், இம்முறை மிகவும் தாமதமாகவே மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.இதன் காரணமாகவே மலர்கள் பூப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. போதிய அனுபவம் இல்லாத அதிகாரிகளே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

The post தொழிலாளர்கள் போராட்டம் எதிரொலி; தாவரவியல் பூங்காவில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூக்கவில்லை appeared first on Dinakaran.

Tags : Feeder Botanical Park ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...