திருப்பத்தூர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தலையணையால் அழுத்தி கொல்ல முயன்ற மனைவி, அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு சகாதேவன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(37). இவரது மனைவி சோனியா(28). இந்நிலையில் சோனியாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த சக்திவேல், சோனியாவை கண்டித்து வந்துள்ளார். ஆனால் சோனியா கள்ளக்காதலை கைவிடவில்லையாம். இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சோனியா கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த 25ம்தேதி இரவு சோனியா, தனது கள்ளக்காதலன் ஆகாஷுக்கு போன் செய்து வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். அதன்பேரில் ஆகாஷ், தனது நண்பருடன் சோனியா வீட்டிற்கு வந்துள்ளார். சோனியா உள்பட 3 பேரும் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சக்திவேலின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் சுதாரித்துக்கொண்ட சக்திவேல், 3 பேரையும் கீழே தள்ளிவிட்டு, அவர்களிடம் இருந்து தப்பி வெளியே சென்றார்.
இதுகுறித்து சக்திவேல் திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சோனியா அவரது கள்ளக்காதலன் ஆகாஷ் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆகாஷின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
