புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. பொதுவாக தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் அதிகம் நிகழ்வது வழக்கம். இந்த முறை தேர்தல் ஆணையம் விதிகளை மிக தீவிரமாக அமல்படுத்த தயாராகி வருகிறது. விதிகளை மீறினால் மறுதேர்தல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் தலைமை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் தெளிவான அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. அதாவது, ‘இந்த முறை முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குச்சாவடிகள் நேரலையாக கண்காணிக்கப்படும். கேமராக்கள் அணைக்கப்பட்டாலோ அல்லது சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டாலோ உடனடியாக மறு தேர்தலுக்கு உத்தரவிடப்படும்’ என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
