×

தொழிற்சாலைகளில் பாலியல் புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு கட்டாயம்

சேலம், மார்ச் 18: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பாலியல் புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு கட்டாயம் அமைக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் கலைமதி அறிவித்துள்ளார். இது குறித்து சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநர் கலைமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பணியிடங்களில் இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பெண்களை பாதுகாக்கவும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணவும், பாலியல் துன்புறுத்தல் சட்டம்-2013 (தடுத்தல், தடை செய்தல் மற்றும் தீர்வு காணுதல்) இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்து தொழிற் சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க உள்ளக குழு அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களின் வேலையளிப்பவர்களால் உள்ளக புகார் குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் எனவும், இச்சட்டத்தின் வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் உள்ளக குழு அமைக்கப்பட்ட விபரங்கள், அந்தக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை www.tnswd-poshicc.tn.gov.in மற்றும் https://shebox.wcd.gov.in/ ஆகிய இணையதளங்களில் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் வேலையளிப்பவருக்காக வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற தவறும்பட்சத்தில், அந்த வேலையளிப்பவரின் மீது ரூ.50,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Internal Complaints Committee ,Salem ,Industrial Safety Kalaimathi ,Namakkal ,Salem Industrial Safety ,
× RELATED என்எம்எம்எஸ் தேர்வில் 355 மாணவர்கள் தேர்வு