தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலாதலமாக சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிக பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.
எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று விடுமுறை காரணமாக சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அங்குள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, அறிவியல் பார்க், தொங்கு பாலம், மயில் கூண்டு, முயல் கூண்டு, டைனோசர் பார்க், நீச்சல் குளம், முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். அதேபோல் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தால் சாத்தனூர் அணையில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த மீன்களை சுற்றுலா பயணிகள் வாங்கி அங்கேயே சமைத்து சாப்பிட்டு பொழுது கழித்தனர். மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் சாத்தனூர் அணை பொன்விழா கண்ட இந்த அணையாக திகழ்கிறது.
119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் விவசாய பாசனத்திற்காக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு வலது புறம் இடது புறம் வழியாக 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் சாத்தனூர் அணை 112 அடியாக நீர்மட்டம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
