சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் அருண் வாழ்த்து தெரிவித்தார். சென்னை பெருநகர காவல்துறையில் போலீஸ் கமிஷனர் அருண் பதவியேற்ற பிறகு பெண் காவலர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் காவலர்களுக்கு மகப்பெறு விடுப்பு, வார விடுமுறை, கர்ப்பிணி காவலர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணி மாறுதல் என பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
அந்த திட்டங்களை தமிழ்நாடு காவல்துறையில் சென்னை பெருநகர காவல்துறையில் தான் முதல் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், கர்ப்பிணி காவலர்கள் சொந்த மாவட்டங்களுக்கு பணிமாறுதலும் செய்யப்பட்டனர். இந்நிலையில், உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் முதல் பெண் காவலர்கள் வரை மற்றும் பெண் அமைச்சுப்பணியார்களை கவுரவிக்கும் வகையில், கமிஷனர் அருண் நேற்று நேரடியாக கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை நேரில் சந்தித்து மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது பெண் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள், போலீஸ் கமிஷனர் அருண் உடன் ஒன்றாக குழு போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
