சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் பணியிலுள்ள ஆசிரியர்களுக்காக ஆண்டுக்கு 3 சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி முதல் சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4, 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறப்பு டெட் தேர்வெழுதவுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்தரமோகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தற்போது பணிபுரியும் ஆசிரியர்களில் சிறப்பு டெட் தேர்வெழுத உள்ளவர்களை தேர்வுக்கு தயார்செய்ய வேண்டும். இதையடுத்து தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (DIET) அனுபவமுள்ள பயிற்றுநர்களை நேரடி மற்றும் இணையவழியில் பயிற்சி வழங்க எஸ்சிஆர்டிஇ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ’’என்று கூறப்பட்டுள்ளது.
