திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது அடித்து கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். ஸ்ரீமதி, ‘‘நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா?’’ என்றார். சிபிஐ தரப்பில், ‘‘புகாரில் உண்மை இல்லை என்பதால் அது தொடர்பான வழக்கு முடிக்கப்பட்டது’’ என கூறப்பட்டது. இந்நிலையில், அஜித்குமாரின் தாய் மாலதி மடப்புரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘`பொய் புகார் அளித்த நிகிதாவை போலீசார் கைது செய்ய வேண்டும்.
பொய் புகாரை விசாரிக்குமாறு கூறிய மேலதிகாரி யார் என்று தெரிய வேண்டும். யாருடைய அழுத்தம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றது? தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது. உயர்நீதிமன்ற நீதிபதி தாயாக இருந்து இந்த உத்தரவை வழங்கி உள்ளார்’’ என்று தெரிவித்தார்.அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறும்போது, `‘இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் காயமடைந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.
