கிருஷ்ணகிரி, டிச.31: கிருஷ்ணகிரி மாவட்டத்த்தில் 2025-26ம் ஆண்டு ராபி பருவ நெல், ராகி, உளுந்து, நிலக்கடலை பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில், பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பிர்காக்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்யலாம். இதற்கு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட, கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பம், நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை கொண்டு வரும் 31.1.2026ம் தேதி வரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயனடைய ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.474.90, ராகிக்கு ரூ.174, உளுந்திற்கு ரூ.255 மற்றும் நிலக்கடலைக்கு ரூ.330 பிரிமியம் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், காப்பீட்டுத்தொகையாக நெல்லுக்கு ரூ.38300, ராகிக்கு ரூ.11600, உளுந்திற்கு ரூ.17000 மற்றும் நிலக்கடலைக்கு ரூ.22000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பதிவு செய்யும்போது விவசாயிகள் பெயர் மற்றும் விலாசம், நிலப்பரப்பு, சர்வே எண், உள்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
