திண்டிவனம் : திண்டிவனம் மேம்பாலம் மேல் பகுதியில் திண்டிவனம் நகர சப்-இன்ஸ்பெக்டர் கவுதமன் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி செல்லும் பேருந்தில் கையில் பையுடன் சந்தேகப்படும் வகையில் இறங்கிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவரது பையில் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர் மேல்மலையனூர் தாலுகா மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் தண்டபாணி (43) என்பதும், செஞ்சி போக்குவரத்து பணிமனையில் திருவண்ணாமலை-சென்னை மார்க்கத்தில் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர் குட்கா பொருட்களை கடத்தி வந்து வேறு ஒருவருக்கு விற்க முற்பட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 90 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி, தண்டபாணியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
