×

உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கு வரும் 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு

சென்னை: உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கு வரும் 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வருகிற 25ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் குறிப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்ஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள் எழுத்துதேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மேற்படி பதவிகளுக்கான தெரிவு மேற்கொள்ளப்படும்.

எனவே, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. தேர்வர்கள் மேற்படி மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,
× RELATED புதிய சட்டத்தின்படி 125 நாட்கள் வேலை...