- திருவள்ளூர்
- திருவள்ளூர் மாவட்டம்
- கலெக்டர்
- பிரதாப்
- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையம்
திருவள்ளூர், செப்.18: திருவள்ளூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், நாளை(19ம் தேதி) காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, 200க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த, வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார் துறை இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு, தனியார் துறையில் அசெம்ப்ளி லைன் ஆபரேட்டர், ஷீட் மெட்டல் வொர்க்கர், மெஷின் ஆபரேட்டர், நிர்வாகப்பணி போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ள வேலைதேடும் இளைஞர்கள், இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
