சென்னை: மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து செயல்பாட்டை விழிப்போடு கண்காணித்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: சட்டமன்ற உறுப்பினராக, 1989-ல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச ‘பஸ் பாஸ்’ வழங்க வேண்டும் என்பதுதான். அதனை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்துகளை நமது திராவிட மாடல் ஆட்சியில் இயக்கி வருகிறோம். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டை தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் மேலும் சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
