சென்னை: விஜய்யின் ஒவ்வொரு நிகழ்வும், பேச்சும், திமுக வெறுப்பை மட்டுமே மையமாக கொண்டு உள்ளது என்று திருமாவளவன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்ட பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பா.ஜ. அரசு தரம் தாழ்ந்து அரசியல் செய்வதற்கு சான்று வேறு இல்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், 24ம் தேதி, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கலந்துகொள்ளும். 23ம் தேதி, இடது சாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து போராட்டம் அறிவித்து இருந்தோம். அந்த போராட்டம் 24ம் தேதி நடக்கும்.
விஜய்யின் ஒவ்வொரு நிகழ்வும், பேச்சும், திமுக வெறுப்பை மட்டுமே மையமாக கொண்டு உள்ளது. நாட்டை பற்றியோ, மக்கள் நலன்கள் பற்றியோ இருப்பதாக தெரியவில்லை. மக்கள் கவனித்து வருகின்றனர். அவரது திட்டம், நோக்கம் என்ன என்பதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தலில் அது வெளிப்படும்.திமுக மீது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சொல்லியவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது வரலாறாக இருக்கிறது. ஜெயலலிதா, எச்.ராஜா ஆகியோர் சொன்னதையே பேசுகிறார் விஜய். எச்.ராஜாவின் மற்றொரு குரலாக தான் விஜய், சீமான் பேச்சு வெளிப்படுகிறது. இவர்கள் எல்லாம் யார் என்பது வெளிப்படையாக தெரியவருகிறது. தேர்தல் நேரத்தில் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
