சென்னை: தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை கண்டிக்கும் வகையில் செப்.7ம் தேதி காங்கிரஸ் சார்பில் நெல்லையில் மாநில மாநாடு நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டுப் போயிருப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று இந்தியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்து நாள்தோறும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அதற்கு பா.ஜ. இசைவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் எதிர்கட்சிகள் இக்கோரிக்கையை மக்களவையில் எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் கேள்வி நேரத்தின் போது கேட்கிற கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால் அந்த கடமையை நிறைவேற்றாமல் பா.ஜ. புறக்கணித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை கண்டித்து செப்டம்பர் 7ம் தேதி மாலை 4 மணியளவில் நெல்லையில் எனது தலைமையில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
