சென்னை: தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக்கை வெட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் மகன்கள் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய் பிரபாகர், சண்முக பாண்டியன் உள்பட கட்சியினர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கும்மிடிப்பூண்டியில் தொடங்கி செங்கல்பட்டு வரைக்கும் முதல்கட்ட சுற்றுப்பயணம் நடந்திருக்கிறது. அந்த பயணம் மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியிருக்கிறது. காட்டுப்பாக்கத்தில் விஜயகாந்தை பார்த்து பார்த்து கட்டின வீடு. மிக விரைவில் அந்த இல்லம் கேப்டன் இல்லமாக திறக்கப்படும். விரைவில் அங்கே நாங்கள் குடியேறுவோம். இப்போது இருக்கும் இல்லத்தை அலுவலகமாக மாற்றி விடுவோம். கேப்டன் ரியல் எம்ஜிஆராக வாழ்ந்தவர். அதனால் தான் மக்களே வந்து கறுப்பு எம்ஜிஆர் என்று அழைத்தார்கள். மற்றவர்கள் எம்ஜிஆரை பற்றி சொல்றாங்க என்றால், ஏன் சொல்றாங்க என்று நீங்கள் அவரிடம் தான் சொல்ல வேண்டும். வருகிறவர்களுக்கு அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஒரு முடிவு பண்ணி தான் வர்றாங்க. இவ்வாறு அவர் கூறினார்.
