×

சென்னை கூவம் ஆற்றின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது: இந்தியாவின் முதல் பசுமை விளையாட்டு பூங்கா; ‘கானகம்’ ஆனது கழிவு நிலம் ; சென்னை மாநகராட்சி அசத்தல்

* சிறப்பு செய்தி
உயர்ந்து செல்லும் கான்கிரீட் கட்டிடங்களின் நடுவே, பசுமையின் தவிப்பை உணரும் சென்னை மாநகரம் இன்று ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் முன்னணியில் நிற்கும் சென்னையில், வானளாவிய கட்டிடங்களின் நிழலில் மறைந்துபோன இயற்கையின் அழகை மீண்டும் கொண்டு வருவதற்கான முன்னோடி முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. நகர்ப்புற காடுகளை உருவாக்கும் இந்த அரிய முயற்சியானது, கொளுத்தும் வெப்பத்தை தணிக்கவும், மக்களின் மன நிம்மதிக்கும் ஆறுதலான தீர்வாக அமைந்துள்ளது. இந்த மனிதநேய முயற்சியின் பிரகாசமான உதாரணமாக அண்ணா நகரில் ‘கானகம்’ என்னும் அற்புதமான பசுமை சொர்க்கம் உருவாகியுள்ளது.

கூவம் ஆற்றின் அரவணைப்பில், முன்பு கழிவுகளின் சாம்ராஜ்யமாக இருந்த 3.5 ஏக்கர் பரப்பளவிலான நிலம், இன்று மக்களின் இதயத்தை கொள்ளையடிக்கும் பசுமையான சொர்க்கமாக மாற்றம் கண்டுள்ளது. சென்னை மாநகராட்சி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் கூட்டு முயற்சியால் உருவான இந்த ‘கானகம்’, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் மக்களின் உடல்நலத்தையும் நிம்மதியையும் வளர்க்கும் அரிய களமாக திகழ்கிறது. இந்த மயக்கும் பூங்காவில் 5,000க்கும் மேற்பட்ட மரங்கள் தங்களின் பசுமையான கரங்களை விரித்து நிற்கின்றன.

இவை வெறும் செடிகளாக நடப்படாமல், வலுவான வேர்களுடன் நிலத்தில் உறுதியாகப் பதிக்கப்பட்ட பாரம்பரிய முறையில் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும். பூங்காவின் 60 சதவிகிதப் பகுதியில் பசுமையின் அழகும், மீதமுள்ள 40 சதவிகிதத்தில் மக்களின் பொழுதுபோக்கிற்கான நவீன வசதிகளும் திறமையாக இணைக்கப்பட்டுள்ளன. 800 மீட்டர் நடைபாதை, 250 மீட்டர் நீளத்தில் கால்பந்து மைதானம், குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டு பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிகளுக்காக நிழற்கூடங்கள் (பர்கோலா, கசபோ) சுகாதார வசதிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வசதி உடற்பயிற்சி மற்றும் குடும்ப கூட்டங்களுக்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கானகம் வெறும் பூங்காவாக மட்டுமின்றி, ‘ஸ்பாஞ்ச் பூங்கா’ வடிவமைப்பில் அமைக்கப்பட்ட சூழலியல் அதிசயமாகும். மழைக்காலங்களில் இது இயற்கையான நீர் சேமிப்பு தொட்டியாக செயல்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து சேகரிக்கப்படும் 66 டன் காய்கறி கழிவுகள் இங்கே பசுமை உரமாக மாற்றப்பட்டு, மரங்களுக்கு இயற்கை ஊட்டமளிக்கும் சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த அற்புதமான சூழலியல் சுழற்சி கழிவுகளை வளங்களாக மாற்றும் அரிய முன்னுதாரணமாக விளங்குகிறது. ‘கானகம்’ பூங்கா இந்தியாவின் முதல் விளையாட்டு மைதானத்துடன் ஒருங்கிணைந்த பசுமை பூங்காவாக வரலாறு படைத்துள்ளது. இதுபோன்ற ஒருங்கிணைந்த அமைப்பு இந்தியாவில் வேறெங்கும் காண முடியாத தனித்துவமான சாதனையாகும்.

* நகர வாசிகளுக்கு அரிய பரிசு
‘கானகம்’ பூங்கா என்பது வெறும் பசுமை இடம் அல்ல – அது நகர்ப்புற வாழ்க்கையில் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உயிருள்ள பாடமாகும். இது விளையாட்டு ஆர்வலர்கள், குழந்தைகள், மூத்தோர் என அனைத்து வயதினருக்கும் உடல்நலம், மன நிம்மதி மற்றும் சமூக உறவுகளை வளர்க்கும் திறந்த நூலகமாக திகழ்கிறது. சென்னை மாநகரத்தின் பரபரப்பான வணிக மையத்தில் அமைந்துள்ள இந்த பசுமை விருந்து, நகரவாசிகள் இயற்கையோடு தொடர்பு கொள்ள வாய்ப்பளிக்கும் அரிய பரிசாக உள்ளது.

விளையாட்டு வசதிகள்
* 250 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள கால்பந்து மைதானம்
* 800 மீட்டர் நீளத்தில் நடைபாதை (நடக்கும் பயிற்சிக்கான பாதை)
* குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி
இவை தவிர, பொது மக்கள் உடற்பயிற்சி, நடப்பு பயிற்சி, குடும்பங்களாக ஓய்வு மற்றும் சந்திப்பு நிகழ்வுகளுக்கு ஏற்ற வகையில் வசதிகள் உள்ளன.

* மர வகைகள்
செம்பருத்தி, வேம்பு, சப்போட்டா, பாதாம், புளியமரம், மாமரம், அரசமரம், நெல்லி, நாவல், புங்கை, மூங்கில், கொய்யா, அசோகமரம், மந்தாரை, அத்தி, நீலி, பலாமரம், செம்மரம், மகிழமரம், பவள மல்லி, கார்டினியா, மஞ்சள் தேகோமா, அரளி.

‘ஸ்பாஞ்ச் பூங்கா’ வடிவமைப்பில் அமைக்கப்பட்ட சூழல்
* மழைநீர் தேக்கம் மற்றும் சேமிப்பு
* வெள்ளத் தடுப்பு அமைப்பு
* நிலத்தடி நீர்மட்ட உயர்வு
* இயற்கையான நீர் வடிகால் முறை
* பசுமை புரட்சியின் முன்னுதாரணம்

Tags : Chennai ,Cooveam River ,India ,Chennai Corporation ,
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயோகாஸ் ஆலை அமைக்க திட்டம்