தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முதுநிலை நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டிலேயே மையம் ஒதுக்கீடு: தேசிய தேர்வு வாரியம்

டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முதுநிலை நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டிலேயே மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்காக எம்.பி.க்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை அணுகினர். அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து திமுக எம்.பி. வில்சன் தேர்வு மையங்களை மாற்றக் கோரி மனு அளித்திருந்தார்.

எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு மையங்களை மாற்றி தேசிய தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்சி மற்றும் அரியலூரைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு ஆந்திரா மாநிலம் கர்னூலில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்களுக்கு கரூர் மற்றும் திருச்சியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தேர்வு எழுத இருந்த பெண் மருத்துவர்கள் பலருக்கும் தமிழ்நாட்டிலேயே மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 31ஆக இருந்த தேர்வு மையங்கள் 17ஆக குறைக்கப்பட்டதே வெளி மாநிலங்களில் மையம் ஒதுக்க காரணம்.

தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிட்ட 4 மையங்களில் ஒன்றை ஒதுக்காமல் வேறு மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது. மையங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என தேசிய தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முதுநிலை நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டிலேயே மையம் ஒதுக்கீடு: தேசிய தேர்வு வாரியம் appeared first on Dinakaran.

Related Stories: