மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை நாட்டுக்கே முன்மாதிரியான திட்டம்: புதிதாக 7.35 லட்சம் பெண்களுக்கு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்திருக்கும் திட்டம் என்று கூடுதலாக 7.35 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கினார். அவர் பேசியதாவது: கடந்த செப்டம்பர் 15ம் நாள் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். செப்டம்பர் 15, அக்டோபர் 15 என்று இரண்டு மாதங்களுக்கான 2000 ரூபாயை, 1 கோடியே 6 லட்சம் சகோதரிகள் வாங்கிவிட்டார்கள்.

இந்த முறை முன்கூட்டியே இன்றைக்கு மாலைக்குள் அடுத்த 1000 ரூபாயும் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். இந்த தொகை, உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை. இந்த உரிமைத் தொகை உண்மையிலேயே தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் போய் சேரவேண்டும் என்பதில் அரசு மிகவும் கவனமாக இருந்தது. கடந்த ஜூலை 24ம் தேதி, தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் அந்த முகாமை, நானே நேரில் சென்று தொடங்கி வைத்தேன். ஏறக்குறைய 1 கோடியே 63 லட்சம் மகளிர் விண்ணப்பித்தார்கள். இதற்கும் சிலர் விமர்சனம் செய்தார்கள்.

தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சொன்னதை, தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக செய்கிறார்கள் என்று பேசினார்கள். நாம் தொடக்கத்தில் இருந்தே தெளிவாக சொன்னோம். தகுதி உள்ளவர்கள் யார் யாரென்று நேர்மையான, பாரபட்சமற்ற விதிமுறைகளின் அடிப்படையில், அரசு சார்பில் வெளியிடப்பட்டு, தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை குடும்ப அட்டைதாரர்களையும் விண்ணப்பிக்க சொன்னோம். இந்த திட்டத்தின் நோக்கத்தையும், விதிமுறைகளின் குறிக்கோளையும் மக்கள் உள்ளார்ந்து புரிந்து கொண்ட காரணத்தால், 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், 1 கோடியே 63 லட்சம் மகளிர் மட்டும் விண்ணப்பித்தார்கள்.

மக்களுடைய இந்த புரிதல், இந்த திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தை காண்பித்தது. விமர்சித்தவர்கள் அமைதி ஆகிவிட்டார்கள். இப்படி விண்ணப்பத்தவர்களில் இருந்து, 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரத்து 375 தகுதியுள்ள மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்லோருக்கும் அவர்களுடைய வங்கி கணக்கில், இந்த திட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாகவே, அதாவது, செப்டம்பர் 14ம் தேதியே, அந்த மாதத்திற்கான உரிமைத்தொகையான 1000 ரூபாயை நாம் வரவு வைத்தோம். அந்த மாதம், வங்கி கணக்கு இல்லாத 2 லட்சத்து 42 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு, மணியார்டர் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

அடுத்து அக்டோபர் 15ம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைத்தோம். மணியார்டர் மூலம் உரிமைத்தொகை வழங்கப்பட்ட மகளிருக்கு, வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வளவு பெரிய திட்டம், ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள், அவர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய். ஆனால், எந்த சிறிய புகாருக்கும் இடமில்லை. அதுதான், இந்த திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி. அந்த பெருமிதத்துடன் சொல்கிறேன், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்திருக்கக்கூடிய திட்டம். இந்த மாதத்தில் இருந்து, 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். உங்களுக்கான 1000 ரூபாயை நேற்றே (நேற்று முன்தினம்) உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

உங்களுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்’ 1000 ரூபாய் இனி பெறப்போகிறார்கள். நீங்கள் மட்டுமல்ல, தகுதியுள்ள யாரும் விடுபட்டுவிட கூடாது என்று கவனமாக இருக்கிறோம். அதனால்தான், விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற காரணத்தை, குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம். அந்த காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு கொடுத்தோம். அதை பயன்படுத்தி, மேல்முறையீடு செய்தார்கள்.

அவர்களுடைய விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். சரிபார்ப்பு அலுவலர்கள் களஆய்வு செய்து, தகுதிபெறும் மகளிருக்கு, வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலமாக 1000 ரூபாய் வழங்கப்படும். எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்திக்காட்டிய பெருமை, அரசு அலுவலர்களையும், பணியாளர்களையும்தான் போய்ச் சேரும். இந்த திட்டத்திற்கு பொறுப்பை ஏற்றுக்கொண்ட இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி, அரசு அலுவலர்களுடன் இந்த திட்டச் செயல்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள நடத்திக்கொண்டே இருப்பார்.

அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் முதல், தமிழ்நாட்டின் கடைகோடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் என அனைத்து நிலை பணியாளர்களும் தொடர்ந்து உழைத்ததின் விளைவுதான், இந்த மாபெரும் வெற்றி. இந்த திட்டம் இவ்வளவு பெரிய இமாலய வெற்றி பெற உழைத்திட்ட அனைவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்து காட்டி இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும், வளரும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, அனைத்துக்கட்சி எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* தொண்டை வலி இருந்தாலும் தொண்டில் தொய்வு கூடாது
கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டாலும், தொண்டை வலி மட்டும் இருக்கிறது. என்னுடைய குரலை கேட்கும்போதே உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான், சில நாட்களாக வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக்கொண்டேன். இந்த வாரம் முழுக்க ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னாலும், என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக இணைந்திருக்கின்ற உங்களை எல்லாம் நான் பார்க்க வந்துவிட்டேன்.

தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது, அதனால்தான் வந்துவிட்டேன். உங்களை பார்க்கும்போது என்னுடைய உடல் வலி எல்லாம் குறைந்து மனது மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது. இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட, கொடுக்கும்போது, எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியைவிட சிறந்த மருந்து எதுவாக இருக்க முடியும். அதனால்தான், மருத்துவர்கள் அறிவுரையையும் மீறி இந்த விழாவுக்கு வந்துவிட்டேன் என்று முதல்வர் கூறினார்.

* டிசம்பரில் மேலும் பலருக்கு ரூ.1000
விண்ணப்பித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படாததின் காரணத்தை குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தோம். அந்த காரணம் ஏற்புடையதாக இல்லையென்றால், மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு கொடுத்தோம். அதை பயன்படுத்தி, மேல்முறையீடு செய்தார்கள். அவர்களுடைய விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். சரிபார்ப்பு அலுவலர்கள் களஆய்வு செய்து, தகுதிபெறும் மகளிருக்கு, வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலமாக 1000 ரூபாய் வழங்கப்படும்.

The post மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை நாட்டுக்கே முன்மாதிரியான திட்டம்: புதிதாக 7.35 லட்சம் பெண்களுக்கு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: