சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 3-வது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு வழக்கில் அமலாக்கத்துறையால் ஜூன் 14ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் செந்தில் பாலாஜியை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேரில் சந்தித்து முதலாவதாக 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கியிருந்தார்.
அதன் பிறகு அவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் செந்தில் பாலாஜிக்கு கஸ்டடி கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இடைநீதிமன்றம், அவருக்கு 8 நாட்கள் கஸ்டடி வழங்கியிருந்தது. இருப்பினும் செந்தில் பாலாஜியை ஒருநாள் கூட காவலில் எடுத்து விசாரிக்க முடியாத சூழல் இருந்தது. இதனிடையே செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முடித்து வைத்தது. அதாவது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில், நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நன்றாக இருக்கிறார்களா? என செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேட்டறிந்தார். மேலும் தங்கள் தந்தை பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜி தனது தந்தை பெயரை தெரிவித்தார். அதன் பிறகு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு அதாவது அடுத்த மாதம் 8ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
The post அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆக.8ம் தேதி வரை காவல் நீட்டிப்பு: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.