மெரினா கடற்கரையில் போர்வையை விரித்து ஒவ்வொரு நாளும்….. காதல் மன்னன் சந்திரமோகன் தினம் ஒரு தோழியுடன் கறிவிருந்து: பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: போலீசாரை இழிவுப்படுத்தி பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சந்திரமோகன் குறித்து புதிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் காதல் மன்னன் சந்திரமோகன் மெரினா கடற்கரையில் போர்வையை விரித்து ஒவ்வொரு நாளும் ஒரு தோழியுடன் கறி விருந்துகளுடன் தனிமையில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. மெரினா லூப் சாலையில் நேற்று முன்தினம் கள்ளக்காதல் ஜோடி ஒன்று ரோந்து போலீசாரை இழிவாகவும், ஆபாசமாக பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட காவலர் சிலம்பரசன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தனது தோழியுடன் வேளச்சேரி அருகே உள்ள தங்கும் விடுதியில் இருந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமியை அதிரடியாக தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கைது செய்த பிறகு சந்திரமோகன் தான் செய்தது தவறு என்று தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பகிரங்கமாக போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் போலீசார் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோரை நேற்று நள்ளிரவு சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் போலீசார் இன்று அதிகாலை புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சந்திரமோகன் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் வெவ்வேறு பெண்களுடன் ஒன்றாக சுற்றும் வீடியோ காட்சிகள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்திரமோகனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மகள் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வருவதால், சந்திரமோகன் வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் வெளியே சுற்றுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த நாட்களில் தான் சந்திரமோகன் தனது பெண் தோழிகளுடன் மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து நிலா வெளிச்சத்துடன் ஆட்டுக்கறி, மீன் வறுவல், பிரியாணி மற்றும் மது விருந்துகளுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் இரவு நேரத்தில் மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் சந்திரமோகனை கடந்த ஒரு மாதத்திற்கு மேல் கண்காணித்து அவரை கண்டித்து வந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பெண்களுடன் கணவன் மனைவி போன்று மணல் பரப்பில் போர்வைகளை விரித்து கறி மற்றும் மது விருந்துகளுடன் கொண்டாடுவது சரியில்லை என்று எச்சரித்துள்ளனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போன்று காதல் மன்னன் சந்திரமோகன் தனது பெண் தோழியுடன் பட்டினப்பாக்கம் கடல் மணல்பரப்பில் போர்வையை விரித்து கறி விருந்துகளுடன் மது போதையில் தோழியுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்துள்ளார். இதை பார்த்த ரோந்து போலீசார் இது போன்று ஒவ்வொரு நாளும் அநாகரிகமாக செயல்படுவதுசரியில்லை. உடனே இங்கிருந்து கிளம்பி செல்லுங்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சந்திரமோகன் மது போதையில் ஆத்திரமடைந்து தனது போனில் போலீசாரை வீடியோ எடுத்துள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் தங்களது போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கைது செய்யப்பட்ட சந்திரமோகன் தனது தோழியுடன் 2 நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் நள்ளிரவு தகராறில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளின் விபரங்கள் வருமாறு:
போதையில் இருந்த சந்திரமோகன், இங்கே உட்கார கூடாது என்று போர்டு இருக்கா…நான் ஐ-போன் வைத்து இருக்கிறேன். ஒரு லட்சத்து 45 ஆயிரம் போன் வைத்து இருக்கிறேன். நீ என்னை வீடியோ எடுக்கிறீயா…. போலீசார் இரவு நேரத்தில் இதுபோல் இருக்க கூடாது என்று கூறுகின்றனர். அதற்கு சந்திரமோகன், தம்பி நீ விஜயகாந்த் போல் அழகாக இருக்கிற தம்பி…. நாளைக்கு இன்ஸ்டாகிராமில் போடு… போலீசார் யாராவது உங்களிடம் தவறாக நடக்க முயன்றால் என்ன செய்வீர்கள் என்பதால் தான் நாங்கள் உங்களை இங்கிருந்து கிளம்புங்கள் என்று கூறுகிறோம் என்று தெரிவித்தனர்.

அதற்கு சந்திரமோகன் தோழி… அதை நாங்கள் பார்த்துக்கிறோம் சார்… நீங்கள் போங்க… போலீசார் சொல்வதை கேளுங்கள் என்று கூறியதும், சந்திரமோகன், நீங்கள் விஜயகாந்த் போல் இருக்கிறீங்களே என்று பலத்த சிரிப்புடன் கேலி செய்கிறார்… போலீசார், ஏங்க இரவு 1 மணிக்கு வந்து இப்படி உட்கார்ந்து இருப்பீங்களா…. சொல்லுங்க… அதற்கு சந்திரமோகன் இங்க ஒரு மணிக்கு மேல் உட்காரக்கூடாது என்று போர்டு இருக்கா என்று வாக்குவாதம் செய்கிறார். இவர் தான் விஜயகாந்த் தம்பி….. தம்பி நாங்க எல்லாம் சேப்பாக்கம் தான்… உடனே சந்திரமோகன் தோழி.. சும்மா இருங்க சார், நானே உங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுகிறேன்… நீங்க ஓவராக பேசுறீங்க… நாங்களே கோயிலுக்கு போயிட்டு வந்து இருக்கோம்.

போலீசார்.. ஆமாம் கோயிலுக்கு போயிட்டு பூஜை முடித்துவிட்டு வந்து இருக்கிறாரு…. சந்திரமோகன் தோழி, அவர் போதையில் இருப்பதால் நான் சாப்பிட வைத்துவிட்டு அழைத்து செல்கிறேன் என்று சொன்னேன். அவர் வந்து வீடியோ எடுத்து கொண்டு இருக்கிறாரு…. அதற்கு சந்திரமோகன், தம்பி விஜயகாந்த் எடு வீடியோவை…. நீ யாரை வேண்டும் என்றாலும் கூட்டிக்கொண்டு வா… என்னை நீ உள்ளே வைத்துவிட்டாய் என்றால் நீ ஷார்ப் யா… உன்னால் முடிந்ததை பார் என்று போதையில் தனது தோழியுடன் போலீசாரை நோக்கி ஏக வசனத்தில் பேசுகிறார். இந்த வீடியோ தான் தற்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.

The post மெரினா கடற்கரையில் போர்வையை விரித்து ஒவ்வொரு நாளும்….. காதல் மன்னன் சந்திரமோகன் தினம் ஒரு தோழியுடன் கறிவிருந்து: பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: