மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நாளை போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடு: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி காரணமாக போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: மெரினா கடற்கரையில் நாளை நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சி காரணமாக, போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்தலாம். திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணாசாலையைப் பயன்படுத்தலாம்.  இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். அண்ணா சிலையிலிருந்து எம்டிசி பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை, டிடிகே சாலை, ஆர்.கே.சாலை அண்ணாசாலையை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாகன நிறுத்தத்திற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் காமராஜர் சாலையில் கடற்கறை சாலை விஐபி- விவிஐபி கார் பார்க்கிங், பிரசிடன்சி கல்லூரி, சுவாமி சிவானந்த சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி (நீல வண்ண பாஸ் மட்டும்) வாகனங்களை நிறுத்தலாம். சாந்தோம் சாலையில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி, செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப் பள்ளி, புனித சாந்தோம் பள்ளி, செயின்ட் பெட்ஸ் மைதானம், கதீட்ரல் ஆரம்ப பள்ளி, சமுதாய கூடம், சாந்தோம், லூப் ரோடு (ஒரு பக்க பார்க்கிங்) ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.

ஆர்.கே.சாலையில் எம்ஆர்டிஎஸ்- லைட் ஹவுஸ் சாலை, என்கேடி பள்ளி (ஐஸ் ஹவுஸ் சந்திப்பு), குயின் மேரிஸ் கல்லூரி, புனித எபாஸ் பள்ளியில் வாகனங்களை நிறுத்தலாம். வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு), விக்டோரியா விடுதி மைதானம், அண்ணாசாலையில் தீவுதிடல் மைதானம், பொதுப்பணித்துறை மைதானம் (செயலகம் எதிரில்), மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, எம்.ஆர்.டி.எஸ் சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் காலை 9.30 மணிக்கு மூடப்படும். எனவே, தனியார் வாகனத்தில் நிகழ்ச்சியை பார்வையிட விரும்பும் பார்வையாளர்கள் கூடிய விரைவில் வருகை தர வேண்டும். ஏர் ஷோவை பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்தலாம். எதிர்பார்க்கப்படும் மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்களின் அடர்த்தி காரணமாக நாளை சென்னை முழுவதும் சிரமமில்லாமல் பயணிக்க எம்டிசி பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் எம்ஆர்டிஎஸ் ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எம்டிசி சிற்றூந்துகள் மூலம் அண்ணாசாலை மெட்ரோவில் இருந்து சிவானந்தா சாலையில் டிவி ஸ்டேசன் வரையிலும், வாலாஜா ரோட்டில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரையிலும், ஆர்.கே சலையில் வி.எம் தெரு சந்திப்பு வரையிலும் மாநகர பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நாளை போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடு: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: