அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் கோயிலுக்கு செல்லும் வழி தொடர்பாகவும், சாமி தரிசனம் செய்வது தொடர்பாகவும் பிரச்னை ஏற்பட்டு அன்றைய வருடமே கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக பட்டியலின மக்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே சாமி கும்பிடுவது, பூஜைகள் செய்வது தொடர்பாக அதிகாரி தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பட்டியல் மக்களும் கோயிலில் பூஜை செய்ய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அப்போது பட்டியலின மக்கள் கோயிலுக்கு பூஜைகள் செய்ய இருதரப்பினரும் ஒப்புக்கொண்ட நிலையில் பிரச்னைகள் நடைபெறா வண்ணம் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த தரப்பினர் முதலிலும், பட்டியலின வகுப்பைச் சார்ந்த தரப்பினர் அதன் பின்னரும் கோயிலில் பூஜை செய்ய முன்னேற்பாடுகள் காவல்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படியே கோயில் நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோயிலுக்கு பூஜை செய்ய சென்றபோது மாற்று சமூகத்தை சேர்ந்த பலர் கோயிலுக்கு செல்லும் வழியானது பட்டா நிலம் எனக் கூறி பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல வழிவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் போது எங்கள் பட்டா நிலத்தின் வழியே செல்ல அனுமதிக்க மாட்டோம் என மீண்டும் வலியுறுத்தினர். அடுத்த கட்டமாக கோயிலுக்கு செல்ல வேறு வழி உள்ளதா என வருவாய்த்துறையினரிடம் கேட்டதற்கு, சில பகுதிகள் சேரும் சகதியுமாய் உள்ளது. அதன் வழியே செல்ல இயலாது என அரசு அதிகாரிகள் வட்டாட்சியரிடம் தெரிவித்தனர். அதன்பின்பு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார், கோயில் அருகே வந்தபோது ஊர் மக்கள் அனைவரும் ஓடி வந்து எட்டியம்மன் கோயில் வாசலில் அமர்ந்தபடி முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் எட்டியம்மன் கோயில் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையில், தற்பொழுது கோயில் கருவறை வாசல் மட்டும் வருவாய்த்துறை முன்னிலையில் சீல் வைக்கப்படும் எனவும், நீங்கள் முறையாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து பிரச்னையை தீர்த்துக் கொள்ளுங்கள் என கூறினர். இதையடுத்து ஒரு பிரிவு மக்கள் கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து சென்றனர். அதன்பின்பு வட்டாட்சியர் சரவணகுமார் முன்னிலையில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கோயில் கருவறை மற்றும் நுழைவு வாயிலில் சீல் வைத்தனர். இதனால் ஊர் முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது.
The post கும்மிடிப்பூண்டி அருகே கோயில் கும்பாபிஷகத்தில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு: மறியல் போராட்டத்தால் பரபரப்பு; போலீசார் குவிப்பு; கருவறைக்கு சீல் appeared first on Dinakaran.