கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசினேன்; மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உறுதி அளித்துள்ளார்: ராகுல் காந்தி

கேரளா: கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசினேன்; மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உறுதி அளித்துள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கையில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் வெல்லரிமலை பகுதியில் அதிகாலையில் ஏற்பட்டது. கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒரு குழந்தை உட்பட 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவந்த நிலையில் அவர்களும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். மண் மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கி புதையுண்ட மக்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியதாவது,

வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசி, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக உறுதியளித்தார். அனைத்து ஏஜென்சிகளுடனும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை எங்களுக்குத் தெரிவிக்கவும் நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஒன்றிய அமைச்சர்களிடம் பேசி, வயநாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு அனைத்து UDF ஊழியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்திருந்தார்.

The post கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசினேன்; மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உறுதி அளித்துள்ளார்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: