பலத்த காற்றுக்கு இடையே ‘ஸ்கை டைவிங்’ செய்த ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: அரியானாவில் ‘ஸ்கைடைவிங்’ சாகச விளையாட்டில் ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தைரியமாக ஈடுபட்டார். உலக ‘ஸ்கை டைவிங்’ தினத்தையொட்டி, ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் (56), நேற்று அரியானா மாநிலம் நர்னாலில் சாகச விளையாட்டில் ஈடுபட்டார்.

பிரத்யேக விமானத்தில் பயணித்த அவர், நடுவானில் பயிற்சியாளர் ஒருவருடன் துணிச்சலாக குதித்து, வான்பகுதியில் பறந்தார். பலத்த காற்றுக்கு இடையே தான் பறக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவில், ‘இந்தியர்்கள் மத்தியில் வான் சாகச விளையாட்டுகள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், தாய்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு இந்தியர்கள் செல்கின்றனர். இப்போது இந்தியாவிலும் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கான முக்கிய நடவடிக்கையாகும். ஸ்கை டைவிங் செய்தபோது மிக சிலிர்ப்பாக இருந்தது. இத்தகைய சாகச விளையாட்டுகளை பிற மாநிலங்களிலும் தொடங்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒன்றிய அரசு செயல்படுத்தும்’ என்றார்.

The post பலத்த காற்றுக்கு இடையே ‘ஸ்கை டைவிங்’ செய்த ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: