நீட் விலக்கு மசோதாவை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட்மேன் தான் ஆளுநர் ரவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை: நீட் விலக்கு மசோதாவை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட்மேன் தான் ஆளுநர் ரவி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். நீட் தோ்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரன்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற திமுக பிரமுகர் ராமலிங்கம் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநர் ஆர்.என்.ரவி அல்ல, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தான்.

மசோதாவை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட்மேன் தான் ஆளுநர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது, உறங்காது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் கொடுத்தது திமுக. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும், ஆளுநரின் இந்த போக்கை கண்டித்துதான் தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம் நடத்துகிறது என்று கூறினார்.

 

The post நீட் விலக்கு மசோதாவை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட்மேன் தான் ஆளுநர் ரவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்! appeared first on Dinakaran.

Related Stories: