அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த அலுவலர்களுக்கு ரூ.1 லட்சம்: அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

சென்னை: வணிகவரித் துறையில் வரி பகுத்தாய்வுப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த 2 அலுவலர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024ம் ஆண்டு ஜுலை மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் போது வணிகவரித்துறை வரி பகுத்தாய்வுப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த உதவி ஆணையர் ராம்குமார் மற்றும் மாநில வரி அலுவலர் முஹம்மது இர்பான், ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,00,000 காசோலையை அமைச்சர் வழங்கினார்.

மேலும் அனைத்து இணை ஆணையர்களும் தங்கள் கோட்டங்களை சார்ந்த பகுதிகளில் அடிக்கடி ஆய்வு செய்து, போலி பில் தயாரித்து வணிகம் செய்யும் நிறுவனங்களை கண்டறிதல், ரூ.40 லட்சத்திற்கு மேல் தொழில் செய்வோர் விவரங்களை கண்டறிந்து ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருதல், தொடர்ந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) துர்காமூர்த்தி, வணிகவரித்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த அலுவலர்களுக்கு ரூ.1 லட்சம்: அமைச்சர் மூர்த்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: