இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 13ம் தேதி பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற 27 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்தது. மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டத்தை முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் ஐந்து விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியங்களால் ராமேஸ்வரம் பகுதி மீனவ கிராமங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு வார காலத்தில் இலங்கை கடற்படையினர் கைது செய்த 64 தமிழக மீனவர்களையும், இவர்களின் 10 படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று காலை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால், ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். மீன்பிடிக்க செல்லாததால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.3ம் தேதி மண்டபத்தில் ரயில் மறியல், நவ.6ம் தேதி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்றனர்.
The post 64 மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.