சோதனை மின்அளவீட்டின் மூலம் மின்கணக்கீட்டில் முறைகேடுகளை கண்டறிய சோதனை அலுவலர்களுக்கு மின் வாரியம் உத்தரவு

சென்னை: சோதனை மின்அளவீட்டின் மூலம் மின்கணக்கீட்டில் முறைகேடுகளை கண்டறிய சோதனை அலுவலர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மின் வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வழங்கல் விதியின் கீழ், மின்கணக்கீட்டின் போது முறையான கணக்கீட்டிற்கு பதிலாக தன்னிச்சையான, உண்மை நிலைக்கு மாறான கணக்கீட்டை கணினியில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க மற்றும் உரிய காலத்தில் உண்மையான கணக்கெடுப்பு உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு அறிவுறுத்தல்கள் தலைமை அலுவலகத்திலிருந்து பல்வேறு காலகட்டஙகளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கணக்கீட்டின் சரியான தன்மையை உறுதி செய்ய, சோதனை மின்அளவீட்டின் மூலமாக உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கள ஆய்வு செய்யும் அலுவலர்கள், ஆய்வு செய்யப்படும் பிரிவில் களஆய்வு நாளின் கணக்கீட்டாளரால் கடைசியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின்னிணைப்புகளில் குறைந்தபட்சம் 10 சதவீத மின்னிணைப்புகளை தேர்ந்தெடுத்து சோதனை மின்அளவீடு எடுப்பதன் மூலம், மின்கணக்கீட்டின் துல்லியத்தினை உறுதி செய்யும்படி அனைத்து சோதனை அலுவலர்களை அறிவுறுத்தப்பட வேண்டும். உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம். பிரிவு அலுவலகங்கள் உட்பட அனைத்து அலுவலர்களும் இனிவரும் காலங்களில் குறைபாடுகள் ஏற்படாத நிலையினை உறுதிப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சோதனை மின்அளவீட்டின் மூலம் மின்கணக்கீட்டில் முறைகேடுகளை கண்டறிய சோதனை அலுவலர்களுக்கு மின் வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: