தேர்தல் பிரசாரம் என்றால் சிறப்பாக பொய் கூறுவார் மோடி: காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி விமர்சித்த நிலையில், தேர்தல் பிரசாரம் என்றால் மட்டும் பிரதமர் மோடி சிறப்பாக பொய் கூறுவார் என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. ராஜஸ்தானின் சிட்டோகர் நகரில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் எந்த இடத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தாலும் தான் வேதனைப்படுவதாகவும், ஆனால் ராஜஸ்தானில் உள்ள அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசானது இதனை பாரம்பரியமாக மாற்றியுள்ளது என்று கூறியிருந்தார்.  பிரதமரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து ஒரு வார்த்தைக்கூட பேச மாட்டார். உஜ்ஜைனியை பற்றி பேசமாட்டார். பெண் மல்யுத்த வீரர்களுக்கு எதிரான தனது கட்சி எம்பியின் அட்டூழியங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார். தேசிய சாம்பியன்களுக்கு எதிரான டெல்லி போலீசாரின் கொடூரமான நடத்தையை கண்டிக்க மாட்டார். ஆனால் தேர்தல் பிரசாரம் என்று வந்தால்மட்டும் வெட்கமே இல்லாமல் சிறப்பாக பொய் கூறுவார்” என்று பதிவிட்டுள்ளார்.

The post தேர்தல் பிரசாரம் என்றால் சிறப்பாக பொய் கூறுவார் மோடி: காங்கிரஸ் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: