அச்சிறுப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் முன்பு மின் தடையை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் முன்பு அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே அமணம்பாக்கம் கிராமத்தில் பள்ளிக்கூட தெரு, பெருமாள் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் மின்சாரம் இல்லாமல் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமலும், பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமலும் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டனர். இதுதொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அமணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று அச்சிறுப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டைத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மின்தடை கண்டித்து பொதுமக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அச்சிறுப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் முன்பு மின் தடையை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: