முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான்: ஐகோர்ட் கருத்து

சென்னை: கடந்த 2022ம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில், சி.வி.சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சி.வி.சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திண்டிவனம் மற்றும் விழுப்புரம் நகர காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை என்றால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால், திமுக நிர்வாகியால் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான். அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முடியுமா? என்று அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு பிரிவு ஏதேனும் பொருந்தும் என்றால் அந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்ய முடியும் என்றார். இதேபோல, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்கு பேர் புகார் அளித்துள்ளனர். இவற்றில் ஒரு புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த இரு வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான்: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: