புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பால், பிரெட், அசைவ உணவுகள், பருப்பு, தானியங்கள், விதைகள் அனைத்துமே பதப்படுத்தப்பட்டு வருகிறது. உணவின் இயற்கை தன்மையை மாற்றி அமைக்கப்படுவது தான் பதப்படுத்தப்பட்ட உணவுகள். அதாவது, ஒரு உணவில் சர்க்கரை, உப்பு, வெண்ணை, வினிகர் எல்லாம் சேர்க்கப்படும் போது அது பதப்படுத்தப்பட்ட உணவாக மாறுகிறது. முன்பு குறிப்பிட்ட சில உணவுகளான ஜாம், ஊறுகாயினை வீட்டிலேயே தயாரிப்பார்கள்.

ஆனால் இன்று அந்த உணவும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவதால், அவை அல்ட்ரா முறையில் பதப்படுத்தப்படுகிறது. காரணம், அந்த உணவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க ப்ரீசர்வேடிவ்களை சேர்க்கிறார்கள். மேலும் எமல்சியர், செயற்கை நிறங்கள், ஃபிளேவர்கள் சேர்க்கப்படுகின்றன. நாம் பிரெட் உடலுக்கு தீங்கு விளைவிக்காதுன்னு சாப்பிடுகிறோம். ஆனால் இது போல் இன்ஸ்டன்ட் முறையில் தயாரிக்கப்படும் பிரெட், சிப்ஸ், கலர் பானங்கள், பிஸ்கெட் அனைத்தும் அல்ட்ரா முறையில் பதப்படுத்தப்படுகிறது. அதுவே நம் உடலில் பலவித உபாதைகள் ஏற்பட காரணிகளாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கவும் இதுவும் ஒரு காரணம் என்கிறார் புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜோவிடா.

‘‘கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான உணவுகளில் செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள், இனிப்புகள் எல்லாம் சேர்த்து அதனை அழகுப்படுத்தி தான் விற்பனை செய்கிறார்கள். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால், முதலில் இதய கோளாறு, நீரிழிவு பிரச்னை என படிப்படியாக ஆரம்பித்து கடைசியாக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இதனை சர்வதேச புற்றுநோய் நிறுவனம் தங்களின் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது.

நம் முன்னோர் காலத்தில் தின்பண்டங்களான முறுக்கு, கடலை மிட்டாய், எள்ளு உருண்டை அனைத்தும் வீட்டிலேயே தயாரிப்பது வழக்கம். ஆனால் இன்று நாம் சாப்பிடும் சிப்ஸ், பேக்கரி உணவுகள், வண்ணங்கள் நிறைந்த கேக்குகள் என இவை அனைத்தும் நம் உடலை பாதிக்கக்கூடியவை. இதில் அதிக அளவில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. நாம் சாதாரணமாக சாப்பிடக்கூடிய உணவில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம். உதாரணத்திற்கு பாக்கெட்டில் விற்கப்படும் இன்ஸ்டன்ட் பாப்கார்ன்களுக்கு பதில், சோள முத்துக்களை கொண்டு வீட்டிலேயே பாப்கார்ன் தயாரிக்கலாம்.

அதே போல் தயிரில் பழச்சாறுகளை சேர்த்தால், கடையில் விற்கப்படும் பிளேவர்டு யோகர்ட் கிடைக்கும். ரெடிமேட் சாஸ்கள் கூட வீட்டில் தயாரிக்க முடியும். அதனை அவ்வப்போது செய்து உண்ணும் போது அது நம்முடைய உடலை பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து நாம் வெளியே விற்கப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால், அதனால் பல இன்னல்களை இளம் வயதிலேயே சந்திக்க நேரிடும். குறிப்பாக புற்றுநோய் என்பது புற்றீசல் போல் நம்மில் பரவி வருகிறது.

இதனை தடுக்க நாம் இன்றே நம் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினை மாற்றிக்கொள்வது அவசியம். இது குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். நாம் மட்டுமில்லாமல் நம்மைச் சார்ந்த மற்றவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் பரவி வரும் புற்றுநோய்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’’ என்றவர், நாம் ஆரோக்கியம் என்று நினைக்கும் உணவிலேயே செய்யப்படும் கலப்படம் குறித்து விவரித்தார்.

‘‘நாம் வாழும் மண், சுவாசிக்கும் காற்று அனைத்தும் மாசுப்பட்டுள்ளது. இப்போது கோடைக்காலம் துவங்கிவிட்டது. தெருவெங்கும் தர்பூசணிப் பழம் விற்பனை செய்வதைப் பார்க்கலாம். இந்த பழம் சிவப்பாக இருந்தால்தான் சுவையாக இருக்கும் என்ற நம் எண்ணத்தை புரிந்துகொண்டு அதில் சாயத்தினை ஊசிக் கொண்டு ஏற்றுகிறார்கள். மிளகில் பப்பாளி விதைகள் சேர்க்கிறார்கள். மிளகாய் தூளிலும் அதன் சிவப்பு நிறங்களுக்கு ஃபுட் கலரினை சேர்க்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், நாம் ஆரோக்கியம் என்று கருதும் காய்கறியிலும் ரசாயனம் கலந்துள்ளது. அதற்காக அதை சாப்பிடாமலும் இருக்க முடியாது. மாறாக தண்ணீரில் வினிகர், எலுமிச்சை, கல் உப்பு சேர்த்து அந்த தண்ணீரில் காய்கறிகளை நன்கு கழுவி பிறகு பயன்படுத்தலாம். எல்லாவற்றையும் விட இது போல் கலப்படம் செய்பவர்களுக்கு சட்டம் கடும் தண்டனை அளிக்க முன்வரவேண்டும்’’ என்றவர், நம் உடலை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

‘‘நம்மில் பெரும்பாலானவர்கள் நம் உடல் நமக்கு கொடுக்கும் சிக்னலை புறக்கணிக்கிறார்கள். நம் உடலை நாம் முதலில் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். நம் உடலில் பிரச்னை இருந்தால் உடனடியாக நமக்கு ஒரு சின்ன வலி மூலமாக சிக்னல் கொடுக்கும். அதை நிராகரிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி பிரச்னை என்ன என்று அறிந்துகொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

தொடர் இருமல் இருந்தால் நாமாகவே மருந்து எடுத்துக் கொள்ளாமல் டாக்டரை அணுகுவது நல்லது. பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாதவிடாய் அற்ற காலத்தில் சிறிய அளவில் ரத்தக் கசிவு இருந்தால், உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். அதே போல் மார்பகத்திலும் சின்ன கட்டி தட்டுப்பட்டாலும் கவனிக்க வேண்டும். சிலருக்கு பசி மற்றும் செரிமானம் சரியாக இருக்காது. அவர்களுக்கு வயிறு அல்லது குடலில் பிரச்னை இருக்கலாம். ஒருவர் பார்க்கும் தொழிலே கூட அவர்களுக்கு எமனாக மாறும் வாய்ப்புள்ளது. நம்முடைய வாழ்க்கை மற்றும் உணவு முறையை முறையாக கடைப்பிடித்தாலே 80% புற்றுநோய் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க முடியும்.

தற்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பினை தடுக்க 9 முதல் 14 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி உள்ளது. இதனை அந்த வயதுள்ள பெண்களுக்கு செலுத்தலாம். அந்த வயதினை கடந்துவிட்டாலும் 45 வயது வரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க அதைவிட மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி உள்ளது. இதனை பெண்கள் எடுத்துக்கொள்வது அவசியம்.

புற்றுநோய் பொறுத்தவரை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதனை எளிதில் கட்டுப்படுத்த முடியும். அவர்கள் தங்களின் வாழ்நாள் முழுதும் முறையான வாழ்க்கைமுறையினை கடைப்பிடித்து வந்தால், மீண்டும் கொடிய நோயின் தாக்கம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்’’ என்றார் புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜோவிடா.

தொகுப்பு: நிஷா

The post புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்! appeared first on Dinakaran.

Related Stories: