அரசு பள்ளிகளில் பணியாற்றும் பொறுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசியர்களை நியமிக்க அனுமதி: பள்ளிக்கல்வித்துறை!

சென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றும் பொறுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசியர்களை நியமித்துக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு மிகாமல் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவகர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து, அவற்றுள் மூத்த பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பொறுப்பு தலைமையாசிரியராகப் பணிபுரிவதால் பதிலியாக பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக அடிப்படையில் இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கட்கு மதிப்பூதியம் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.12,000/-, ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அவ்வரசாணையில் ‘வரும் ஆண்டுகளில் தொடக்கக் கல்வி துறை மற்றும் பள்ளிக் கல்வி துறையில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம்/பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை, மாணவ மாணவிகளின் கல்வி நலன் கருதி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய பள்ளிக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் அளித்து ஆணை வழங்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணையில் குறிப்பிட்டுள்ள அதிகாரத்திற்குட்பட்டும், சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால மற்றும் இறுதி தீர்ப்பாணைகளின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) தவறாமல் பின்பற்றி 2023-2024ம் கல்வியாண்டிற்கு பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் உள்ள காலிப்பணியிடங்கள்/மகப்பேறு விடுப்பில் சென்றதாலும், பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருந்து அவற்றுள் பொறுப்புத் தலைமையாசிரியராக பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதிலியாகவும், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக நியமனங்களை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்நேர்வில் நடப்பு (2023-2024) கல்வியாண்டிற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் போது, சென்ற ஆண்டு (2022-2023) மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளும்படியும், சென்ற அவ்வாறு ஆண்டைவிட கூடுதலாக நியமனம் செய்யப்பட தேவை இருப்பின், எவ்வளவு தேவை என்பதை கடிதம் வாயிலாக தெரிவித்து, பின்னர் நியமனம் செய்து கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அரசு பள்ளிகளில் பணியாற்றும் பொறுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசியர்களை நியமிக்க அனுமதி: பள்ளிக்கல்வித்துறை! appeared first on Dinakaran.

Related Stories: