தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு முதன் முறையாக நிரம்பியது அமராவதி: அணைக்கு நீர்வரத்து சரிந்தது


உடுமலை: தொடர்ந்து பெய்த மழை காரணமாக அமராவதி அணை நிரம்பியது. மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து சரிந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணை மொத்தம் 90 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதே போல கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலத்தின் ஒரு பகுதி, கொடைக்கானல் மலையின் ஒரு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை, தேனாறு, கூட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் பருவமழையால் அணைக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த 2022ம் ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததால், அணை ஒரே ஆண்டில் 3 முறை முழு கொள்ளளவை எட்டியது.

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் மள, மளவென சரிந்து 50அடிக்கும் கீழ் சென்றது. அமராவதி அணையானது அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவை, கால்நடைகளின் குடிநீர் தேவை ஆகியவற்றையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் முன்பாக நவம்பர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 80அடியை தொட்டது. தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த 17ம் தேதி 79.66 அடியாக இருந்தது. நீர்வரத்து 505 கனஅடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி மழை பெய்தது. அன்றிரவு அணைக்கு நீர்வரத்து 3391 கனஅடியாக உயர்ந்தது.

மறுநாள் காலை நீர்வரத்து 10,194 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. ஒரேநாளில் 9 அடி அதிகரித்து, நீர்மட்டம் 88 அடியை தாண்டியது. மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து குறைந்து நேற்று மாலை 1066 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 89அடியை தொட்டு விடும். பாதுகாப்பு கருதி 89 அடிக்கு பிறகு அணைக்கு வரும் உபரி நீரை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். தற்போது அணையின் ஷட்டர்களில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறி வருகிறது. இந்த ஆண்டு முதன் முறையாக அமராவதி அணை நிரம்பியுள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

The post தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு முதன் முறையாக நிரம்பியது அமராவதி: அணைக்கு நீர்வரத்து சரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: