மாவீரன் அழகு முத்துக்கோனின் 314வது பிறந்தநாள்: சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள அழகு முத்துக்கோனின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மாவீரன் அழகுமுத்துக்கோன் கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார்.இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது.

அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். இதனால் ஆங்கிலேய அரசு கோபமுற்ற நிலையில் வீர அழகுமுத்துக்கோன் பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தினர்.

மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 314ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள அழகு முத்துக்கோனின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

The post மாவீரன் அழகு முத்துக்கோனின் 314வது பிறந்தநாள்: சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: