புதுக்கோட்டை, டிச.2: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்து, பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொருவருக்கும் கண்பார்வை என்பது மிகவும் முக்கியமானதாகும். பொதுமக்களுக்கு கண்களில் ஏற்படும் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்யும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கண் பரிசோதனைக்கான மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வீரப்பட்டி, வெள்ளாஞ்சார், வெட்டுக்காடு, புங்கினிப்பட்டி, இருந்திராப்பட்டி ஆகிய கிராமங்களில் கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்களுக்கு கண்களில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக பொதுமக்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.