விழுப்புரம், டிச. 1: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. இதில் விக்கிரவாண்டி உட்கோட்டம் மாதா கோயில் தெருவை சேர்ந்த அற்புதமேரி என்பவர் தன் கணவர் அருளப்பன் மற்றும் அவரது 3 பிள்ளைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி ஈச்சங்குப்பம் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 3 பிள்ளைகள். குடும்ப வறுமையின் காரணமாக வேறு வழியின்றி பாக்கம் கூட்ரோடு சாலையிலுள்ள சேட்டு என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் 80,000 பெற்றுக்கொண்டு எனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் ஜனவரி மாதம் 20ம் தேதியில் இருந்து செங்கல் சூளையில் வேலை செய்து வந்தோம். செங்கல் சூளை உரிமையாளர், நாங்கள் செங்கல் தயாரித்த பின்னர் இதர நேரங்களில் எங்களை அவர் சொந்த வேலைகளான வீட்டு வேலை, தோட்ட வேலை மற்றும் வயல் வேலை உள்ளிட்ட வேலைகளை செய்ய சொல்லி எங்களை துன்புறுத்தினார்.