முன்விரோதம் காரணமாக 2 பேரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல்

வில்லியனூர், மார்ச் 25: முன்விரோதத்தால் வாலிபர், அவரது நண்பரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி உறுவையாறு நத்தமேடு தெருவை சேர்ந்தவர் பரதன் (எ) பரத்(25). தொழிலாளியான இவருக்கும், உறுவையாறுபேட் பகுதியை சேர்ந்த மணிபாரதிக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று தனது நண்பர்களான பட்டமுருகன், பச்சையப்பன் ஆகியோருடன் உறுவையாறு, பெருமாள் சிலை மேடு வீதியில் பரதன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மணிபாரதி, அவரது கூட்டாளி தனபால் மற்றும் ஒருவர் ஆகியோர் கத்தியுடன் வந்து இறங்கி பரத்தின் இடது கையில் வெட்டி, இரும்பு ராடால் தலை, நெற்றியில் தாக்கியுள்ளனர்.

இதை தடுக்க வந்த பரத்தின் நண்பரான பச்சையப்பனையும் கத்தியால் மணிபாரதி தரப்பு தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பரத் காயமடைந்த நிலையில் அந்த கும்பல் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதில் காயமடைந்த பரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மங்கலம் காவல் நிலையத்தில் பரத் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா, ஏட்டு ஜெயகணேஷ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: