திருவில்லிபுத்தூர், நவ.27: திருவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் மழைநீர் தேங்கி மினி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.திருவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மடவார் வளாகம் அருகே தொடர்ச்சியாக பெய்த மழையினால், கடந்த சில தினங்களாக மழை நீர் தேங்கி மினி குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த சாலையை பொறுத்தவரை மதுரையில் இருந்து குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வாகனங்களும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த வழியாக செல்வது வழக்கம். நிமிடத்துக்கு நிமிடம் சிறிய மற்றும் பெரிய அளவிலான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், மினி குளம் இருப்பதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.