திருவாரூர், நவ.25: திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் எச்சரிக்கையையொட்டி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ரேஷன்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் குவிந்தனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்றும் இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த புயல் எச்சரிக்கையையொட்டி காற்று துவங்கியவுடன் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் புயல் கரையை கடந்த பின்னர் எந்தெந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னர் அந்த பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று முன்தினம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். புயல் காற்றின் போது மின்கம்பங்கள் அடியோடு சாய்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ந் தேதி இரவு ஏற்பட்ட கஜா புயலின் போது திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்ததன் காரணமாக மின் வினியோகம் என்பது முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்வினியோகம் சரியாவதற்கு மாதக்கணக்கில் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது நிவர் புயல் எச்சரிக்கையையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டன.