சாயல்குடி, அக்.22: கடலாடி அருகே மலட்டாறு விலக்குரோடு சாலையின் நடுவில் காவிரி கூட்டு குடிநீர் உடைந்து தண்ணீர் ஓடி வருவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், தண்ணீர் வீணாகி வருகிறது. ரூ.616 கோடி மதிப்பீட்டில் காவிரி, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2009-10ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீரை மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலாடி-சாயல்குடி சாலை, சாயல்குடி-ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்புள்ள மலட்டாறு விலக்குரோடு பஸ் ஸ்டாப் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலை பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது.