திருப்பூர், அக்.21: திருப்பூரில் நடைபாதையை ஆக்கிரமித்து, பொருட்களை அடுக்கி வைப்பதால், பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். திருப்பூரில் பிரதான ரோடுகளில் உள்ள பெரும்பாலான கடைகள், நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் நடந்து செல்வதற்கு கூட வழிவிடாமல், குறுக்கே பொருட்களை வைத்து, வியாபாரம் செய்கின்றனர். நடைபாதை ஆக்கிரமிப்பால், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகன நெரிசல் ஏற்படுவதுடன், பல நேரங்களில் விபத்தும் நேரிடுகிறது. வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், மெயின் ரோடுகளில் உள்ள கடைகள், நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளதால், நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து கொண்டே போகிறது. கடை ஆக்கிரமிப்புகள் ஒருபுறம் இருக்க, ‘பார்க்கிங்’ வசதி இல்லாததால், முக்கிய ரோடுகளில், நடைபாதையிலேயே பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வைத்து, இடையூறு செய்வதும் அதிகரித்து வருகிறது. திருப்பூர் புது மார்க்கெட் வீதியில், ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.