திண்டிவனம், அக். 18: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜக்காம்பேட்டையை சேர்ந்த சபரிமாலா, அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். நீட் தேர்வால் மருத்துவ கனவு பறிபோன அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதையடுத்து தனது பணியை ராஜினாமா செய்தார். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்கு இவர் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார். தற்போது நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவன் ஜீவித்குமார் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். அவரை படிக்க வைத்து இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியை சபரிமாலா கூறுகையில், நீட்தேர்வுக்காக நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர் ஜீவித் குமாரை அடையாளம் கண்டேன். பலரிடம் நன்கொடை வாங்கி ஓராண்டாக நாமக்கல்லில் உள்ள பயிற்சி மையத்தில் படிக்க வைத்தேன். இதனால் 664 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.