மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை ரேஷன்கடை பெண் ஊழியரை தாக்கிய சம்பவம் கூட்டுறவு சங்க தலைவரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.2: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரேஷன்கடை பெண் ஊழியரை தாக்கிய அதிமுக கூட்டுறவு சங்க தலைவரை கைது செய்யக்கோரி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுக்குடி கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடை இடும்பாவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதில் விற்பனையாளராக சித்ரா (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இடும்பாவனம் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக அதிமுகவை சேர்ந்த உலகநாதன் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி புதுக்குடி ரேஷன் கடைக்கு சென்ற உலகநாதனுக்கும், விற்பனையாளர் சித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சித்ராவை உலகநாதன் தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் உலகநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் உலகநாதனை கைது செய்யக்கோரி நேற்று தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் மற்றும் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் உள்ள 714 ரேஷன் கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக ேரஷன்கடை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குணசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: