சிவகங்கை, செப்.29: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக யூனியன் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கேசவன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை ஒன்றியத்தில் பயிர்காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வில்லை. இழப்பீடு தொகை இல்லாமல் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே உண்மையான பாதிப்பை கணக்கிட்டு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அனைத்து ஊராட்சிகளிலும் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.